கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு
செயல்பட்டது போலவே – மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த
ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு
மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக
அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம்
தானே ராமன், அந்த ராமனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை விழுங்கி விடுவோம்
என்று வில்லை வளைக்கிறார்கள்.
எந்த வித உபாயத்தினால் அந்த மந்த மதியினர்; நம் மீது மோதுகிறார்கள்
என்பதை நினைத்துப் பார்த்திடுவதும் – நிதானமாக சிந்திப்பதும் – நமக்கும்
நமது பாசறையினருக்கும் மிகத் தேவை எனி னும்; நம்மைப்பற்றி நச்சுக்
கருத்துகளைப் பரப்பி நாம் ஏதோ மக்கள் மத்தியிலே நடமாடவே கூடாதவர்கள் என்ற
தோர ணையிலே நாக்கறுப்போம் – தலை யறுப்போம் என்கிற வன்முறை மிரட்டல் களை
வாரியிறைத்துக் கொண்டு இருக்கி றார்களே; அவர்களின் வஞ்சக சூழ்ச்சியை
அறியாமல் அவர்களது பேச்சில், எழுத்தில் மயங்கித் தடுமாறி குழப்பமடைபவர்
களைத் திருத்தித் தெளிவடையச் செய்ய வேண்டியது நமது நீங்காக் கடமை யாவதால்
இன்றைய இந்த நீட்டோலை தேவைப்பட்டது. அதனால் உனக்கும் உன் வாயிலாக
உடன்பிறப்புகளுக்கும், அவர் கள் வாயிலாக, ஆத்திகர், நாத்திகர், பக்த
சிரோமணிகள், பகுத்தறிவு வாதிகள் – அனைவருக்கும் ஓர் ஆரோக்கியமான
விவாதத்திற்கான அழைப்பை இக்கடித வாயிலாகத் தருகிறேன்.
இராமனைக் கருணாநிதி இழித்துரைத்தார் – இராமன் மது அருந்தியதாகக்
கூறுகிறார் – அதனால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் – பதவி துறக்க
வேண்டும் – என்று பதறித் துடிக்கிறார்கள். அய்யோ பாவம்; நான் அவர்களுக்கு
விளக்கமாகக் கூறிவிட்டேன். வால்மீகி எழுதிய ராமா யணம் என்ன சொல்கிறது?
முதறிஞர் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன் என்ற ராமாயண ஆய்வு நூல்
என்ன சொல்கிறது?
அதில் எல்லா பகுதிகளையும் நான் சாட்சியத்துக்காக பயன்படுத்த விரும்ப
வில்லை. இதோ . . .
சீதையைத் தேடி வந்த அனுமான், அவளை அசோக வனத்தில் கண்டு, அவ ளைப் பிரிந்த
இராமன்படும் துன்பத்தை இதோ: சிறீமத் வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்
ஸர்க்கம் 37 வர்ணிக்கிற விதத்தை மாத்திரம் கண்டால் போதும்:-
தேவியாரைப் பிரிந்த நிலையில் இராம ருக்குத் தூக்கமே கிடையாது. எப்போதாவது
தேகம் அலுத்துத் தூங்கினாலும் சீதே என்ற மதுரமான வார்த்தையைச் சொல்லிக்
கொண்டே விழித்துக் கொள்கிறார். தங்கள் நினைவால் மது, மாமிசம் அருந்துவதை
விட்டு விட்டார். வானப் பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்கு களையே சாயங்
காலத்தில் புசிக்கிறார்.
உடன்பிறப்பே, தலையும் நாக்கும் வேண்டும் என்று துடியாய்த் துடிப்பவர்கள்;
அதைப் பிடித்துக் கொண்டு குதியாய்க் குதிப்பவர்கள் – அம்மையின் விரிவால்
அய்யன் துயருற்று அதுவரை அருந்தி வந்த மதுவையும், மாமிசத்தையும் விட்டு
விட்டார் என்பதற்குப் பொருள் என்ன கூறுவரோ? யானறியேன்!
உடன்பிறப்பே, ராஜாஜி எழுதிய சக்கர வர்த்தித் திருமகன் நூலில் அவர் எழுதி
யுள்ளதை அப்படியே தருகிறேன்.
ராமனே! தசரத சக்கர வர்த்தியின் புத்திரனாவாய், உத்தம குலத்தில் பிறந்த
நீ, பேரும் புகழும் அடைந்த நீ ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும்
ஒழுக்க மும் உலகம் அறிந்த விஷயம். இப்படியி ருக்க நான் வேறொருவனிடம்
யுத்தம் செய்து கொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில்
என் கண் களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என் மேல் பாணம் விட்டு
என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது
முற்றிலும் விரோதமா யிருக்கிறதே? தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய
உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே! இப்போது
அவையெல்லாம் என்னவாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்?
யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை
எச்சரித்தாள்; அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென் றும்,
துன்மார்க்கன் என்றும், புல்லால் மூடப் பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி
என்றும் தெரியாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியை
எதிர்த்து யுத்தத்துக்கு வந்தேன். உனக்கு நான் என்ன தீமை செய்தேன்?
உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந்தேன்? அதரு மத்தில் இறங்கி, என்னை
மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரச குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச்
செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்தவனல்ல.
மோசக்காரனான உன் னைப் பூதேவி மணக்க விரும்பமாட் டாள். நீ எப்படி
தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப்
பட்டேன். என் கண் ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந் தாயேல் இன்றே
நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டிருந்தால் ஒரே நாளில் சீதையை
உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே? பிறந்த வர்கள் இறப்பது விதி.
ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம்.
இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரண அவஸ்தையில் ராமனைக் கண்டித் தான்.
வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ
சொன்னதாகவும் அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்டதாகவும் வால்மீகி
ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டுவிட்
டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள். ராமாவதாரத்தில் ஆண்டவனும் தேவியும்
சகிக்க வேண்டிய துக்கங்களில் இந்தத் தவறும் பழியும் ஒன்று.
இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால்; ராமனின் சமாதானம்
வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று
ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.
உடன்பிறப்பே,
ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லவில்லை. யாரைப் பற்றியும்
சொல்லவில்லை! உள்ளங்கை நெல்லிக் கனி போன்ற உண்மை என்னவென்றால்; பா.ஜ.க.
ஆட்சியில பிரதமர் வாஜ்பாய் அவர்களால் அனுமதிக்கப்பட்ட சேது சமுத்திரத்
திட்டம்; அந்த ஆட்சி தொடராத காரணத்தால் இடையில் நின்று போய்; இப்போது
இன்றுள்ள மத்திய ஆட்சியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின்
வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்
ஆகியோரின் பெரு முயற்சியினால் தொடரப்பட்டு அப்பணி யில் தம்பி
டி.ஆர்.பாலுவின் அயரா முயற்சியால் அத்திட்டம் வளர்ந்து வரும் நிலையில்;
திடீரென இராமனையும், இராமர் பாலத்தையும் இடையிலே புகுத்தி திசை
திருப்பியவர்கள் யார் என்பதையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள இக்
கடிதத்தில் காணப்படும் கருத்துக்களும், எடுத்துக் காட்டுகளும் மெத்தவும்
பயன்படும் என்று நம்புகிறேன் – எனவே உடன் பிறப்பே! இதனை நீயும் படி!
பிறரும் படித்து உண்மை உணர்ந்திட உதவிடு!
(இதில் நான் குறிப்பிட்டுள்ள சிறீமத் வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்
– சிறீ உ.வே.சி.ஆர். சீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழி
பெயர்க்கப் பட்ட நூல் ஆகும்- 1962 ல் தியாகராயநகர் – தி லிட்டில் பிளவர்
கம்பெனி பதிப் பித்தது) மது என்றால் கள்ளோ, சாராயமோ அல்ல, தேன் என்று
பொருள்படும் என்கிறார் நண்பர் சோ. அப்படியானால் மது விலக்கு சட்டம்
என்பதற்கு தேன் விலக்குச் சட்டம் என்று பொருளா என்பதை அவர்தான் விளக்க
வேண்டும்!
சீதையைப் பிரிந்த வேதனையில் இராமன் தேன் அருந்துவதை நிறுத்தி விட்டான்
என்று வால்மீகி எழுதியிருப் பதாக இவர்கள் சொல்கிறார்களா?
————– 28.9.2007 -“முரசொலி”இதழில் உடன் பிறப்புக்கு டாக்டர்
கலைஞர் அவர்கள் எழுதிய மடல்
Leave a Reply